குற்றம் குற்றமே செய்தி எதிரொலி…!!அதிரடி நடவடிக்கை எடுத்த கோவை போலீஸ் கமிஷனர்!! பாதுகாப்பு கவசங்களுடன் பணிபுரிய போலீசாருக்கு அறிவுரை!!
கோவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார், உரிய பாதுகாப்பு கவசங்களுடன் பணிபுரிகின்றனரா? என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் பணி புரியும் போலீசார் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் பணிபுரிவதுடன், பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார்.

கோவையில் கொரோனா தடுப்புப் பணியில் சோதனைச் சாவடிகள், கட்டுப்பாட்டு பகுதிகளில் ஈடுபட்டுள்ள போலீசார் உரிய பாதுகாப்பு கவசங்கள் இன்றி பணி புரிவதை சுட்டிக் காட்டி, கையுறை இல்லை… பாதுகாப்பு கவசங்கள் இல்லை.. ஊருக்கு தான் உபதேசமா? என நமது குற்றம் குற்றமே புலனாய்வு இதழில் சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த செய்தியின் எதிரொலியாக உடனடி ரியாக்ஷனாக கோவை கமிஷனர் சுமித் சரண் இன்று அதிரடி ஆய்வை மேற்கொண்டார்.

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பணிபுரியும் இடங்களை கமிஷனர் ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் முகக் கவசம், கையுறை, பாதுகாப்பு கண்ணாடி அணிந்து பணி செய்கின்றனரா? என்பதை உறுதி செய்ததுடன், அதன் அவசியத்தையும் போலீசாரிடம் அறிவுறுத்தினார். அத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பது குறித்தும், பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டும் என்பது குறித்தும் அறிவுரைகளையும் வழங்கினார்.

நமது குற்றம் குற்றமே இதழில் நாம் சுட்டிக் காட்டிய பிரச்னையை கையில் எடுத்து உடனடியாக களத்தில் ஆய்வு மேற்கொண்டு கொரோனா கொடுங்காலத்தில் போலீசாரின் பாதுகாப்பை மட்டுமின்றி பொதுமக்களுக்கும் தொற்று பரவி விடக் கூடாது என்ற அக்கறையுடன் அதனை உறுதி செய்த கோவை மாநகர போலீஸ் கமிஷனரின் துரித நடவடிக்கைக்கு சபாஷ்!!






