கர்ப்பிணியை தீ வைத்து கொளுத்திய மாமியார்!
தஞ்சாவூர் மாவட்டம் சூரியன் பட்டியில் மாமியாரால் தீ வைத்து எரிக்கப்பட்ட தாக கூறப்படும் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2019ஆம் ஆண்டு முருகானந்தம் மற்றும் சங்கீதாவிற்கு திருமணம் நடைபெற்ற நிலையில் வரதட்சணை கேட்டு சங்கீதாவை அவரது மாமியார் புஷ்பவல்லி தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டதால் நிறைமாத கர்ப்பிணியான சங்கீதா மீது புஷ்பவல்லி எண்ணெய் விளக்கை வீசி எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் தீக்காயமடைந்த சங்கீதா தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாமியார் புஷ்பவல்லி, கணவர் முருகானந்தம் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.







