“களைகட்டிய தைப்பூசத் திருவிழா..!” பழனி, திருச்செந்தூர், வடலூரில் குவிந்த பக்தர்கள்!!
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி மற்றும் திருச்செந்தூரில் சரண கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.வடலூரில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் ஜோதி தரிசனம் காணவும் பக்தர்கள் அலை அலையாக திரண்டுள்ளனர்.
இன்று தைப்பூசத்தை முன்னிட்டு, பழனி, திருச்செந்தூருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வந்தனர்.பழனியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால், மலைக்கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றுசாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு இன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

திருச்செந்துர் முருகன் கோவிலிலும் தைப்பூசத் திருவிழா களை கட்டியுள்ளது. தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இங்கும் பாதயாத்திரையாக வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் திருச்செந்தூரில் கூட்டம் அலைமோதுகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு கடலுார் மாவட்டம் வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில், இன்று காலை 149 -வது தைப்பூச ஜோதி தரிசனம் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி, முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி இரவு 7 மற்றும் 10 மணி, நாளை காலை 5:30 மணி என ஆறு காலம் 7 திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவதால் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காமல் திரண்டுள்ளது.






