கென்யாவில் நெரிசலில் சிக்கி பள்ளி 14 மாணவர்கள் உயிரிழப்பு
கென்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்தனர். அங்குள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியே வந்தபோது திடீரென நெரிசல் ஏற்பட்டது.
இதில் குழந்தைகள் பலர், ஒருவர் மீது மற்றவர் விழுந்ததில் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெரிசல் எதனால் ஏற்பட்டது, மாணவர்கள் பீதி அடைந்தது ஏன் என்பது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கென்யாவில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும் அங்கு பள்ளிகளின் பாதுகாப்பு தன்மை கேள்விக்குறியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.






