ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகள் – உத்தரவு ஒத்திவைப்பு
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை நீதிபதி என்வி ரமணா, எஸ் கே கவுல், சுபாஷ் ரெட்டி, பிஆர் கவாய், சூர்யகாந்த் ஆகியோரது அமர்வில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது.
நேற்றைய விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜம்மு-காஷ்மீரில் அரசியல் சாசனத்தை திருத்தும் அதிகாரம் இந்திய அரசியல் சாசனத்திற்கு இல்லை என்றும் சிறப்பு மதிப்பை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு கூட இல்லை என்றும் வாதிட்டனர்.
இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காஷ்மீர் குறித்த தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா இல்லையா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.






