பிச்சையெடுக்கும் மூதாட்டியிடம் ரூ.15,000 ரொக்கம்!
புதுச்சேரியில் கோயில் முன்பு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்த 15000 ரூபாய் ரொக்கத்தையும், வங்கி கணக்கு புத்தகத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு பிச்சை எடுப்பவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் கோவில் முன்பு இருந்தவர்களை நகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தினர். அப்போது 70 வயது மூதாட்டி ஒருவரை அப்புறப்படுத்த முயன்றபோது 15 ஆயிரம் ரூபாய் பணம் சாலையில் சிதறியது. தகவல் அறிந்து வந்த போலீசார் மூதாட்டியின் பையை ஆய்வு செய்ததில் வங்கி கணக்கு புத்தகம், தங்கத்தோடு மற்றும் செயின் உள்ளிட்டவை இருந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் மூதாட்டியின் பெயர் பர்வதம் என்றும் அவர் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் என்றும் குழந்தைகள் இல்லாததால் கணவர் இறந்த பின்பு புதுச்சேரிக்கு வந்து பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரியவந்தது.






