அன்புமணியை கட்டி அணைத்து கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தே அன்புமணியை நீக்கியிருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.கட்சி ரீதியான நடவடிக்கைக்கும் மேலாக தனது பெயரை அன்புமணி இனி பயன்படுத்தக் கூடாது எனும் காட்டமான அறிவிப்பையும் கூட ராமதாஸ் அந்த சமயத்தில் வெளியிட்டிருந்தார்.
இருவருக்கும் இடையேயான மோதல் காரணமாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவருமே கட்சியை சொந்தம் கொண்டாடினர். இறுதியில் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் என அன்புமணியை குறிப்பிட்டு அவரது அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியது.பின்னர் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக – பாஜக கூட்டணியில் அன்புமணி இணைந்த நிலையில், ராமதாஸ் தனியாக சசிகலாவின் கட்சியுடன் சேர்ந்து ஒரு கூட்டணியை அமைத்தார்.
இதற்கிடையில் இரண்டு முறை பாமக தலைவர் அன்புமணி, அவரது தந்தையும், பாமகவின் நிறுவனருமான ராமதாஸின் தைலாபுரம் இல்லத்திற்கு அவர் இல்லாத சமயத்தில் சென்று தனது தாயை மட்டும் தனியே சந்தித்துவிட்டு திரும்பியிருந்தார். இப்படி அரசியல், தனி வாழ்க்கை என இரண்டிலும் அன்புமணியும், ராமதாஸும் கடும் மோதல் போக்குடனும், எதிரெதிர் முனையிலும் இருந்தனர். இந்நிலையில், இன்று தனது தந்தையும், பாமகவின் நிறுவனருமான ராமதாஸை அவரது தைலாபுரம் இல்லத்தில் தனது மகள், பேரக்குழந்தைகளுடன் சந்தித்தார் அன்புமணி.
பாமக நிறுவனரான ராமதாஸின் திருமணநாளான இன்று அவரது தைலாபுரம் இல்லத்திற்கு, அன்புமணி தனது மகள்கள், பேரக்குழந்தைகளுடன் வருகை தந்தார். அங்கு தனது தந்தை ராமதாஸைச் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார் அன்புமணி.இந்தச் சந்திப்பின் போது, தனது மகன் அன்புமணியை கட்டி அணைத்து ஆரத்தழுவி வரவேற்ற ராமதாஸ், ஒரு கட்டத்தில் கண்ணீர்விட்டு அழுதார்.
இந்தச் சந்திப்பு முடிந்து வெளியே வந்த அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இன்று என் அப்பா, அம்மாவின் திருமணநாள் என்பதால், குடும்பத்துடன் வந்து ஆசீர்வாதம் பெற்றோம். இனி எல்லாம் நல்லதே நடக்கும்” எனத் தெரிவித்தார்.





