கோவையில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!
தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக, கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கோவை நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்தப் போஸ்டர்களில் நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்துடன், “தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட…” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இத்துடன், நடிகர் ரஜினியின் அரசியல் வருகை குறித்த தங்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் வகையிலான வாசகங்களும் அந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை மாநகர் முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டு உள்ளதால், இது அரசியல் தளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கடந்த மாதம், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், ‘பியர்லெஸ் மைன்ட்ஸ் ஹேவ் நோ லிமிட்ஸ்’ (Fearless minds have no limits – பயமற்ற மனங்களுக்கு எல்லைகள் இல்லை) என்ற ஆங்கில வாசகங்களுடன் கோவையில் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலும் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், கட்சியில் இருந்தும் விலகுவதாக பா.ஜ.க தேசியத் தலைவர் நிதின் நபினிடம் கடிதம் வழங்கினார். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தும் தனது முடிவைத் தெரிவித்துவிட்டார். அண்ணாமலை பா.ஜ.க-விலிருந்து விலகியதைத் தொடர்ந்து, கோவையில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் அவருக்கு ஆதரவாகப் போஸ்டர் ஒட்டியிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.





