திருவள்ளூரில் இனி ‘டபுள் டக்கர்’ எக்ஸ்பிரஸ் நிற்கும்..!
சென்னை மற்றும் பெங்களூரு இடையே இயக்கப்படும் அதிவேக டபுள் டக்கர் விரைவு ரயில் (22625/22626), இன்று (ஜனவரி 26) முதல் திருவள்ளூர் இரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருவள்ளூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்வே வலையமைப்பில் திருவள்ளூர் மிக முக்கியமான நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பயணிகள் சென்னை சென்ட்ரல் வரை சென்று ரயில் ஏற வேண்டிய சிரமம் இனி குறையும் என்பதால், இந்த அறிவிப்பை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
இருப்பினும், ரயில்வேயின் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருவதில் சில தொழில்நுட்பத் தடைகள் இருப்பதாகப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். ரயில்வேயின் பயணிகள் முன்பதிவு அமைப்பில் (PRS) திருவள்ளூர் நிலையம் இன்னும் ஒரு நிறுத்தமாகச் சேர்க்கப்படவில்லை.
இந்த ரயில் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுவதால், முன்பதிவு முறையில் திருவள்ளூர் பெயர் இல்லாததால் பயணிகளால் டிக்கெட் எடுக்கவோ அல்லது அங்கிருந்து ஏறவோ முடியவில்லை. இது தொடர்பாக முன்னாள் மண்டல ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் கே. பாஸ்கர் கூறுகையில், “அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தும், திருவள்ளூர் நிலையம் முன்பதிவு முறையில் இல்லாதது பயணிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இது உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும், நவீனப்படுத்தப்பட்ட பி.ஆர்.எஸ். (PRS NDLS) முறையில் சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களுக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த விவரம் காகித டிக்கெட்டுகளில் அச்சிடப்படுவதில்லை. நவம்பர் 2025 முதல் நீடிக்கும் இந்தப் பிரச்சனை குறித்து புகார் அளித்தும் இன்னும் தீர்வு காணப்படவில்லை எனப் பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விளக்கமளித்துள்ள தெற்கு ரயில்வே அதிகாரிகள், “புதிய நிறுத்தம் முன்பதிவு அமைப்பில் இணைக்கப்படுவதற்கு பொதுவாக இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை ஆகும். விரைவில் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, பயணிகள் திருவள்ளூரில் இருந்து தடையின்றிப் பயணிக்க வழிவகை செய்யப்படும்” என உறுதியளித்துள்ளனர்.






