இலங்கைக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம்..!
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையை மொத்தமாக புரட்டிப்போட்டது. இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால், திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக இலங்கை காட்சி அளிக்கிறது. மழை நின்றபோதும் வெள்ளம் வடியாததால் அந்நாட்டு மக்கள் சொல்லொணா துயரில் மூழ்கி உள்ளனர்.
இந்த டிட்வா புயல் மழை பாதிப்புகளில் இதுவரை இலங்கையில் 330க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். அண்டை நாடான இலங்கை பெரும் இயற்கை பேரிடரில் சிக்கி சொல்லொணா துயரத்தில் தத்தளித்துவரும் சூழலில், இந்தியா உடனடியாக மீட்பு பணியை மேற்கொள்ள இலங்கைக்கு உதவியாக தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பியது. தொடர்ந்து பல டன் நிவாரணப் பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது.
இந்நிலையில், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணப் பொருள்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுப்புகிறார்.
தமிழ்நாடு அரசு சார்பில், நாளை அனுப்பிவைக்கப்பட இருக்கும் அந்த நிவாரணத்தில் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இருக்கின்றன. இந்த நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு கப்பல் மூலமாக, தமிழ்நாடு அரசு நாளை அனுப்பிவைக்கிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும் கப்பலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.





