திண்டுக்கல் சிறையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கூட்டாளி திடீர் மரணம்..!
மதுரை தி.மு.க பிரமுகரை கடத்திய வழக்கில் கைதாகி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் திடீரென உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012-ம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரை கடத்தி, பணம் பறித்த வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளி கேரளாவைச் சேர்ந்த வர்க்கீஸ் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்பட்ட நிலையில், வரிச்சியூர் செல்வம், வர்க்கீஸ் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் வடக்கு போலீசார் வரிச்சியூர் செல்வத்தை கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே வழக்கில் தொடர்புடைய வர்க்கீஸும் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், வர்க்கீஸ் வியாழக்கிழமை மாலை சிறையில் திடீரென உடல்நலக்குறைவால் மயங்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.





