டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்..!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகையானது, 2024-25-ம் ஆண்டுக்கான பணியாளர்களுக்கு, எதிர்வரும் 2025-2026-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதற்காக வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களான மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப் பணியாளர்கள் 24,816 தகுதியுடைய நபர்களுக்கு 20 சதவிகிதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். இதற்காகத் தமிழக அரசுக்கு மொத்தம் ரூ. 40.62 கோடி செலவாகும்.
அரசின் இந்த நடவடிக்கையானது, டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் மிகவும் ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் தொடர்ந்து பணியாற்றுவதையும், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதையும் உறுதி செய்யும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





