--- --:--:-- --

“சாதி தான் என்னுடைய முதல் எதிரி” – திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் கமல் பேச்சு

2

சாதிதான் தம்முடைய முதல் எதிரி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன், திருமாவளவனுக்கு ஒரு கிலோ எடையில் தங்க முலாம் பூசிய வெள்ளி சங்கிலி அணிவித்தார்.

 

முன்னதாக, மேடைக்கு வந்ததும் பாடல் ஒன்றை பாடி அனைவரையும் கவர்ந்தார். பின்னர் மேடையில் பேசிய கமல்ஹாசன், சாதிய தடை நீக்கப்படால் தான் அனைவரும் ஒரு தேச மக்களாக முடியும் என்றார். தமிழ்நாடு இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி பெற்றது சிலருக்கு அதிர்ச்சியாக உள்ளதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

 

இது தொடர்பாக கமல்ஹாசன் பேசுகையில், “நான் கலைஞன். எனக்கு சாதி இல்லை. நான் யார் என்ன வண்ணம் என்பதெல்லாம் முக்கியம் இல்லை. ஒருவரை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களை நாம் சாட வேண்டியது கடமை. இந்தியாவின் பலவீனமே சாதிகள் தான். சாதிய தடைகள் நீக்கப்பட்ட பின்தான் நாம் ஒரு தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும்.

 

ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் மையப்படுத்துவது சாதாரணமான விஷயம் இல்லை. அப்படி செய்பவர்கள் ஆச்சரியமானவர்கள். திருமா போன்ற தலைவர்கள் எப்போதும் வர மாட்டார்கள், அவர்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசியல் அல்லது ஆதாயம் இதில் எது வேண்டும் என கேட்டால் திருமா அரசியலை மட்டும் தான் தேர்வு செய்வார். ஒன்றில் அதிக அடி விழும், மற்றொன்றில் பணம் கிடைக்கும் என்றாலும் அரசியலையே அவர் அதிகம் விரும்புவார்” என்றார்.

Right Menu Icon