ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை..!
ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழ்ழுதிய கடிதத்தில், எல்லார்க்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டங்கள்தோறும் ஆய்வுக் கூட்டங்களை உங்களில் ஒருவனான நான் மேற்கொண்டு வருகிறேன்.
இரண்டு நாட்களாக வேலூர் – திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பிய நிலையில், அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்தில் ஒன்றான இரயில் மூலம் ஜூன் 25 அன்று காலையில் பயணத்தை மேற்கொண்டேன்.
சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வரும் வரையில் மக்களின் பேரன்பை ஏற்றுக்கொண்டு, காட்பாடி வரை இரயிலில் அலுவல் பணிகளையும் ஆலோசனைகளையும் நடத்தியபடியே வந்தேன். எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்தில் ஒன்றான இரயில் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதைக் கைவிடக்கோரி பிரதமர் அவர்களுக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுத்தேன்
.கழகத்தின் பொதுச்செயலாளரும் காட்பாடி தொகுதியின் தொடர் வெற்றி நாயகரும் அமைச்சருமான அண்ணன் துரைமுருகன் உடன் அவரது சொந்த ஊருக்கு இரயிலில் பயணித்ததும், அவருடைய நீண்ட நெடிய அரசியல் அனுபவங்களைப் பகிரக் கேட்டதும் பயணத்தை மேலும் இனிமையாக்கியது.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் தலைமையில் கழகப் பணியாற்றி, இன்று உங்களில் ஒருவனான என் தலைமையிலும் தன் பணியை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருவது கொள்கையுணர்வின் வெளிப்பாடாகும்.





