ஆக.15 முதல் புதிய ஃபாஸ்டேக் நடைமுறை!
சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தும் புதிய பாஸ், ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு, கிலோ மீட்டருக்கு ஏற்ப சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, ரொக்கமாக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், Fastag முறைக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.3,000 சுங்கக்கட்டணம் செலுத்தும் பாஸ் வழங்கும் நடைமுறை, ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்க இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
அதாவது, ரூ.3,000 பாஸ் பெற்றுக் கொண்டால், ஓராண்டிற்கோ அல்லது 200 பயணங்களுக்கோ தனியாக கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம்.கார், ஜீப் மற்றும் வேன்கள் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே ஆண்டு பாஸ் திட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பாஸ் மூலம் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பயணிக்கலாம் என்றும் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.
ராஜ்மார்க் யாத்ரா என்ற செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆண்டு பாஸை பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.60 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடிகள் இருப்பதற்கு எதிரான பிரச்சனைக்கு இந்த ஆண்டு பாஸ் தீர்வாக அமையும் என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.





