சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை விடுத்த அலர்ட்
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால், சுற்றுலா செல்லும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரியில் நாளை வரை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், அரசு தாவரவியல் பூங்கா, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் சென்றது. எனினும், மழையில் நனைந்தப்படி, சுற்றுலாப் பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
இதனிடையே, மண் சரிவால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து நேற்று ரத்து செய்யப்பட்டது. ரயில் பாதை சீர் செய்யப்பட்டபோதும், கனமழை நீடிப்பதால், நாளை வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கனமழை கொட்டியது. இதனால், பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க சென்னையில் இருந்து நீலகிரிக்கு 80 பேர் கொண்ட மாநில பேரிடர் படையினர் சென்றனர். இதில், 40 பேர் உதகைக்கும், 40 பேர் குன்னூருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும், கொடைக்கானலிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பக்கரை அருவிக்கு செல்ல சுற்றுப்பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.






