ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயில்களின் டிரைவர்கள் நிலை என்ன?
ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜூன் 2ஆம் தேதி அன்று மாலை மேற்கு வங்கத்திலிருந்து புறப்பட்ட கோரமண்டல் ரயில், ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தடம்புரண்ட பெட்டிகள் அருகே சென்று கொண்டிருந்த ஹவுரா ரயில் மீது விழுந்தன. இதில் ஹவுரா ரயிலன் கடைசி பெட்டிகளும் சேதமடைந்தன. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளான A1, A2 மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளான B1 முதல் B6 வரையிலான 8 பெட்டிகள் முழுவதும் சேதமடைந்தன. B7 முதல் B9 வரையிலான 3 பெட்டிகளும் பெருமளவு சேதமடைந்தன.
இந்த விபத்தில் கோரமண்டல் ரயிலின் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரும், இரு ரயில்களின் கார்டுகளும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் கோரமண்டல் ரயில் ஓட்டுநர்கள் அளிக்கும் தகவல் மூலமே, விபத்து எப்படி நிகழ்ந்தது என முழுமையாக தெரியவரும்.
இந்த விபத்தில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் ஓட்டுநர் மற்றும் கார்டுக்கு காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை எனவும் சென்னை கொண்டுவரப்பட்ட சிலர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.






