புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன..?
தலைநகர் டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாயில், அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 18 ஏக்கரில் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் பிரமாண்டமாக நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
2 ஆண்டுகள் 5 மாதம் 18 நாட்களில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆயிரத்து 272 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக பயோமெட்ரிக்ஸ், டிஜிட்டல் மொழிபெயர்ப்பு சாதனங்கள், மைக்ரோ போன்கள் போன்றவை நிறுவப்பட்டுள்ளன. சபாநாயகர் மீது எம்.பி.க்கள் காதிதங்கள் உள்ளிட்டவற்றை வீசமுடியாத அளவுக்கு , அவரது இருக்கை மிக உயரமாக இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கையிலும் மல்டிமீடியா காட்சி வசதி உள்ளது.
கேலரிகளில் எங்கு அமர்ந்தாலும் தெளிவாக தெரியும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஊடங்களுக்கு மொத்தம் 530 இடங்கள் ஒதுக்கப்பட்டு நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான வாயில்களுக்கு அறிவு, சக்தி, கர்மா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த 3 வாயில்களுக்கு அருகில் இந்திய வரலாற்றை அறியும் வகையில் வெண்கலப் படங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையின் காட்சிகள், சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் வெண்கல சிலைகள், அனைத்து மாநிலங்களின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் ஒவ்வொரு வாயில் அருகே வைக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்காத அளவுக்கு வலிமையாகவும், தொழில் நுட்பங்களுடனும் நாடாளுமன்றம் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் உச்சியில் அசோகர் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது.





