சுதந்திர தினத்தையொட்டி 4 சிறப்பு ரயில்கள்..!
சுதந்திர தினத்தையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை சுந்திர தின விடுமுறையைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களும் வருவதால், 3 நாட்கள் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க சென்னையில் இருந்து ஏராளமானோர் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்ட நெரிசலை சமாளிக்க 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 14-ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் எனவும், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில், வரும் 17 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல, வரும் 14-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும் எனவும், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இந்த ரயில் செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில், வரும் 17 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17 ஆம் தேதி நாகர்கோவிலில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும் எனவும், நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் மார்க்கத்தில் இந்த ரயில் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, வரும் 18-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் எனவும், இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக நாகர்கோயில் சென்றடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் 14 மற்றும் 16-ஆம் தேதிகளில் மங்களூருவில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் எனவும், மறுமார்க்கத்தில், வரும் 15 மற்றும் 17-ஆம் தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு மங்களூர் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




