கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது
கொரொனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்பியதாக ஈரோட்டில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரொனா தொற்று நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஈரோடு மாவட்டம் சித்தோடு சுற்றுப்பகுதிகளில் வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல்களை பரப்பி பொதுமக்களுக்கு ஒரு சிலர் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி விசாரணை மேற்கொண்டதில் தர்மபுரியை சேர்ந்த வாசுதேவன், கமலேஷ் மற்றும் வரதராஜன் ஆகியோர் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாட்ஸப்பில் தகவல் பரவி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.







