சென்னையில் முதல் சர்வதேச பல்கலை. முதல் 4 புதிய முதலீடுகள்..!
தமிழ்நாடு அரசு உலகின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.425 கோடி முதலீடும், 2,920 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகவுள்ளன.தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உலகின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் ரூ.425 கோடி முதலீடும், 2,920 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாகும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் சென்னை, உலகளாவிய திறன் மையங்கள் (GCC), ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக மேலும் வலுப்பெறும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலகளாவிய காப்பீட்டு நிறுவனமான Chubb, சென்னையில் தனது முதல் Global Capability Centre (GCC)-ஐ அமைக்கிறது. இதன் மூலம் 220 பேருக்கு உயர்தர வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல், ஜெர்மனியைச் சேர்ந்த காற்றாலை தொழில்நுட்ப நிறுவனமான Nordex, சென்னையில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையத்தை தொடங்குகிறது. இந்த மையத்தின் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்கல்வித் துறையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் ஒன்றான University of Western Australia (UWA), இந்தியாவில் தனது முதல் வளாகத்தை சென்னை வேளச்சேரியில் அமைக்க உள்ளது. ரூ.125 கோடி முதலீட்டில், சுமார் 50,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகம், 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும். 1911-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட UWA, QS World University Rankings 2026 பட்டியலில் 77-வது இடத்தை பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டில் அமையும் முதல் சர்வதேச பல்கலைக்கழக வளாகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், தென் கொரியாவின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான MotiveLink, காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்கிறது. இதன் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த முதலீடு, தொழிலத்துறை அமைச்சர் ஜூன் 2026-இல் மேற்கொண்ட தென் கொரியா பயணத்தின் தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனங்களின் முதலீடுகளை விரைவாக செயல்படுத்தவும், தமிழ்நாட்டில் அவற்றின் திட்டங்கள் வெற்றிகரமாக அமைய தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் மாநில அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





