அவிநாசியில் தலை சுற்றலுடன் திரிந்த மயிலுக்கு தஞ்சம் கொடுத்த நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிர்வாகிக்கு பாராட்டு..!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே போத்தம்பாளையம் பகுதியில் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லம் இயங்கி வருகிறது. நேற்று (19.12.2024) வியாழக்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் முன் நடக்க முடியாமலும், பறக்க முடியாமலும் தலை சுற்றலுடன் கூடிய ஒரு பெண் மயில் தஞ்சம் அடைந்தது.
இதனையறிந்த நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் தெய்வராஜ் மற்றும் அவரது மனைவி சிவகாமி, அவரது குழந்தைகள் சந்தோஷ், தன்விகா ஆகியோர் அந்த மயிலை பிடித்தனர்.
பின்னர் இரவு நேரம் என்பதால் மயிலின் உடல் நிலை அறிந்து காட்டுப் பகுதியில் விடவும் அச்சமாக இருந்ததால் தங்கள் வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்தனர்.

தொடர்ந்து அந்த மயிலுக்கு இரவு முழுவதும் பாதுகாப்பு வழங்கி மயிலின் பசிக்கு அரிசி மற்றும் தானியங்கள் கொடுத்து பாதுகாப்பு கொடுத்தனர். பின்னர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து அவிநாசி வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணன் உத்தரவின்பேரில் வனவர் சங்கீதா மேற்பார்வையில், மான் காப்பாளர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து மயிலை மீட்டார். பின்னர் அவிநாசியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்.
சிகிச்சையின் போது அந்த மயிலுக்கு காயங்கள் எதுவும் இல்லை. ஆனால், குளிர்,வெயில் போன்ற தட்பவெப்பநிலை மாற்றத்தால் சில மயில்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்றும், 2 நாட்களில் அதுவே சரியாகி சென்று விடும் என்றும், இந்த மயிலுக்கு 2 வயது ஆகிறது என்றும் கால்நடை மருத்துவர் கூறினார்.
பின்னர் அந்த மயில் சிகிச்சைக்கு பின் அவிநாசி பகுதியில் உள்ள புதுப்பாளையம் குளத்தில் விடப்பட்டது. மயில் பிடிபட்டது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் தெய்வ ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




