தடுப்பூசி போடப்பட்ட 2 மணி நேரத்தில் 27 ஆடுகள் பலியான சம்பவம்..!
திருப்பத்தூர் அருகே நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடப்பட்ட 27 ஆடுகள் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம் சின்ன வெங்காயம் பள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் 40 ஆண்டுகளாக ஆடு வியாபாரம் செய்து வருகிறார்.
கோடைகாலம் என்பதால் ஆடுகளை பல நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதால் ஆடுகளுக்கு தடுப்பூசி போட முடிவு செய்துள்ளார். இதற்காக திருப்பத்தூர் அரசு தலைமை கால்நடை மருத்துவரை அணுகி யுள்ளார். இவரின் உத்தரவின் பேரில் கால்நடை மருத்துவர் ராஜா வளர்ந்த ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுள்ளார்.
ஊசி போடப்பட்ட இரண்டு மணி நேரத்தில் 27 செம்மறியாடுகள் அடுத்தடுத்து வலிப்பு ஏற்பட்டு இறந்து போய்விட்டன. தகவல் அறிந்த தலைமை கால்நடை மருத்துவர் பிரசன்னா உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினார். ஆடுகள் உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அறிக்கை வந்த பிறகு ஆடுகளின் இறப்பிற்கான காரணம் தெரியவரும். இறந்து கிடந்த ஆடுகளை கண்டு ராஜா மற்றும் அவரின் குடும்பத்தினர் கதறியது வேதனையை ஏற்படுத்தியது. ராஜா குடும்பத்தினருக்கு அக்கம்பக்கத்தினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இறந்துபோன ஆடுகளின் மதிப்பு இரண்டரை லட்சம் என்றும் சொல்லப்படுகிறது. ஆடுகளின் உரிமையாளர்களுக்கு அரசு தரப்பில் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.






