3வது அணியல்ல, நாங்கள் முதல் அணி: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தடாலடி!!
தங்களின் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம், எங்களுடையது மூன்றாவது அணியல்ல, முதல் அணி என்று, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக – திமுக தலைமையிலான கூட்டணிக்கு இடையே பிரதான போட்டி நிலவினாலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக ஆகியனவும் களத்தில் உள்ளன.
இதில், மக்கள் நலக் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும், பாரிவேந்தரைன் இந்திய ஜனநாயக கட்சி ஆகியனவும் இடம் பெற்றுள்ளன. இக்கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு கூட்டாக, தேர்தலை சந்திக்கவுள்ளன.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து ஆகியோர் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, 3 கட்சி தலைவர்களும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர், சென்னையில் செய்தியாளர்களிடம் கமல் கூறியதாவது:
எங்களது கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம். மக்கள் நீதிமய்யம் தலைமையிலான கூட்டணி என்பது, 3வது அணி அல்ல, முதலாவது அணி. எங்களது கூட்டணியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை (மார்ச் 10ம் தேதி) காலை வெளியாகும். அதிமுக, திமுக இரு கட்சிகளும் அகற்றப்படவேண்டியவை.
ஸ்டாலின் உள்பட எல்லார் மீதும் விமர்சனம் வைப்பேன். ஆளுங்கட்சியையும் விமர்சித்து வந்துள்ளேன். வன்னியர் உள்ஒதுக்கீடு என்பது, வங்கியில் இருப்பு வைத்துக் கொண்டு காசோலையை எழுத வேண்டும். இல்லையெனில் அது செல்லாததாகிவிடும் என்று கமல் கூறினார்.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறுகையில், கூட்டணியின் தலைவர் மட்டுமல்ல, முதல்வர் வேட்பாளரும் கமல்ஹாசன் தான். நல்லவர்கள் அனைவரையும் கூட்டணியில் இணையும் படி அழைப்பு விடுக்கிறோம் என்றார்.
ரவி பச்சமுத்து பேசும்போது, கூட்டணி தமிழகத்திற்கு விடிவெள்ளியாக இருக்கும். தமிழகம் எதிர்காலம், மக்களின் எதிர்காலத்திற்காக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




