கொரியாவில் ஆற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்ட புதுச்சேரி இளைஞருக்கு நாடு முழுவதும் குவியும் பாராட்டு!
தென் கொரியாவில் மிகுந்த ஆழம் கொண்ட ஆற்றில் தவறி விழுந்த குழந்தையை புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்மூலம் அவர் இந்திய திருநாட்டிற்கு பெருமை தேடி தந்துள்ளார். தென்கொரிய தலைநகர் சியோலில் அமைந்துள்ள கண்ட் என்ற ஆறு அந்நாட்டில் உள்ள முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும்.
சியோல் நகரை சுற்றி ஓடும் இந்த ஆறு ஒன்றரை கிலோ மீட்டர் அகலமும், நூற்றுக்கணக்கான அடி ஆழமும் கொண்டதாகும். செஜாங் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறையில் பேராசிரியராக பணிபுரியும் புதுச்சேரியை சேர்ந்த ஆரோக்கியராஜ், செல்வராஜ், அவரது நண்பர் ஆனந்த் குமார் சென்றிருந்தனர்.
அப்போது சில புகைப்படங்களை எடுத்துக் கொண்ட அவர்கள் இருவரும் சிறிது நேரம் ஆற்றின் கரையோர படிக்கட்டுகளில் அமர்ந்து இருந்தனர். அச்சமயம் ஆற்றங்கரையோரம் உள்ள தடுப்பின் அருகே ஒரு சிறுவனும், அவனது சகோதரியும் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களது பெற்றோர் அருகில் இல்லை. திடீரென அந்த சிறுமி அவரது பெற்றோரை தேடி பூங்காவிற்கு சென்று விட ஆற்றல் விளையாட முனைந்த சிறுவன் கண்ணிமைக்கும் நேரத்தில் தண்ணீரில் தவறி விழுந்துவிட்டான்.
அப்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. சிறுவன் தண்ணீரில் மூழ்க தொடங்கியதை பார்த்த பேராசிரியர் ஆரோக்கியராஜ் சிறிதும் யோசிக்காமல் ஆற்றில் குதித்தார். சக்திவாய்ந்த அலைகள் வந்த போதும் குழந்தையின் ஒரு கையை கெட்டியாக பிடித்து விட்டார் ஆரோக்கியராஜ்.
அவருக்கு குளம் மற்றும் ஏரியில் தான் நீச்சலடிக்க தெரியும்.
காட்டாற்று வெள்ளம் போல் ஓடும் ஆற்றில் நீச்சல் அடிக்க தெரியாது. ஆனாலும் தனது உயிரை துச்சமென நினைத்து ஒரு சில நொடிகளில் குழந்தையை காப்பாற்றி கரை சேர்த்தார் ஆரோக்கியராஜ். அதேவேளையில் பாலகனைத் தேடி அவரது பெற்றோரும் வந்துவிட்டனர். தனக்கு கொரிய மொழி தெரியாது என்பதால் நடந்த சம்பவத்தை அவர்களிடம் செய்கையில் செய்து காட்டி புரிய வைத்துள்ளார்.
இதனால் ஆனந்த கண்ணீர் வடித்த குழந்தையின் பெற்றோர் ஆரோக்கியராஜ்க்கு நன்றி தெரிவித்தனர். ஐந்து வயது நிரம்பிய குழந்தையை ஆற்றில் இருந்து காப்பாற்றிய ஆரோக்கியராஜ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதன்மூலம் ஆரோக்கியராஜ் புதுச்சேரி மாநிலத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பெருமை தேடி தந்துள்ளார் என்றால் மிகையல்ல.






