கரீப் கல்யாண் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!
புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார். நகரங்களின் வளர்ச்சிக்கு உதவிய தொழிலாளர்கள் இனி இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று பிரதமர் பேசினார்.
கொரொனா தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பை பெற்றிட 50 ஆயிரம் கோடி ரூபாயில் கிராமப்புற பொதுப்பணி திட்டங்களை மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக இந்தத் திட்டத்தை தொடக்கி வைத்தார். புலம்பெயர் தொழிலாளர்களிடையே பேசிய அவர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் அவர்களின் தேவைகள், உணர்வுகள் பூர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.
தங்களது திறமையின் மூலம் நகரங்களை வளர்த்த புலம்பெயர் தொழிலாளர்கள் இனி தங்களது சொந்தக் கிராமங்களை வளர்ப்பார்கள் என்று கூறிய அவர் உலகமே அதிர்ந்து போயிருக்கும் இந்த கொரொனா வைரசுக்கு எதிராக கிராமங்கள் போராடிய விதம், நகரங்கள் கற்க வேண்டிய மிக முக்கியமான பாடம் என்று கூறினார்.
சுயசார்பு இந்தியா திட்டம் மூலமே இந்த கரீப் கல்யாண் திட்டமும் ஏழைகளுக்கு மிகவும் பலனளிக்கக் கூடியதாக இருக்கும் என்று பிரதமர் பேசினார். நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் என்னென்ன பொருட்கள் பிரபலமோ அவற்றை மேம்படுத்துவதற்காக அந்த பகுதிகளில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.






