--- --:--:-- --

தொன்மைப் பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் பேசிய அரசுப்பள்ளி மாணவி… ராமநாதபுரம் எஸ்பி நேரில் அழைத்து பாராட்டு !

3.2

இராமநாதபுரம் மாவட்டம் , திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் 7 – ம் வகுப்பு மாணவி ஹரிதா ஜீவா கல்வெட்டுகள் பற்றிய சில தகவல்கள் என்ற தலைப்பில் பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் பேசியதன் காணொளியை இராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் டிவிட்டரில் பார்த்திருக்கிறார் .

 

பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு , பள்ளி மாணவியருக்கு தொல்லியல் , கல்வெட்டுகள் , கோவில் கட்டடக்கலை பற்றி பயிற்சி அளித்து அவர்களை தொல்லியல் ஆர்வலர்களாக உருவாக்கி வருவதை அறிந்து அவரையும் மாணவி ஹரிதா ஜீவாவையும் நேரில் சந்தித்து பாராட்ட விரும்பினார் .

 

இதன் பேரில் ஆசிரியர் ராஜகுரு மற்றும் மாணவி ஹரிதா ஜீவா ஆகியோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை நேரில் சந்தித்தனர் . மாணவியை கல்வெட்டுகள் பற்றிப் பேசச் சொல்லி முழுவதுமாகக் கேட்டறிந்தார் . இதில் ஆர்வம் வந்ததன் காரணம் , எதிர்காலத்தில் என்ன படிக்க விரும்புகிறார் என்பதையும் , பெற்றோர் தொழில் பற்றியும் கேட்டறிந்தார் . அரசுப்பள்ளியில் பயிலும் மாணவியை பாராட்டி ஊக்கப்படுத்தினார் . தொடர்ந்து இதுபோன்று ஆர்வமுடன் செயல்படக் கேட்டுக்கொண்டார் .

வரலாற்றுத் தேடலில் ஈடுபட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல தொல்லியல் தடயங்களைக் கண்டறிந்தது பற்றியும் , பள்ளி மாணவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து தேடித்திரிவோம் வா என்ற நூல் வெளியிட்டதைப் பற்றியும் , மரபு நடை நிகழ்வுகள் மூலம் பொதுமக்களுக்கு வரலாற்றுச் சின்னங்களின் சிறப்புகளை நேரில் காணச் செய்து வருவதைப் பற்றியும் ராஜகுரு காவல் கண்காணிப்பாளரிடம் விவரித்தார் .

 

இதனால் மனம் நெகிழ்ந்த காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்கள் ஆசிரியர் ராஜகுருவுக்கு ரூ .3000 பரிசாக வழங்கிப் பாராட்டினார் . மாவட்டத்தில் உள்ள பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க உரிய உதவிகள் செய்வதாகத் தெரிவித்தார் .

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon