தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய கோரிக்கை!
கொரொனா நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கல்லூரிகளுக்கான தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்களிடையே எழுந்துள்ளது. பருவத் தேர்வு நெருங்கி கொண்டிருக்கிறது என மாணவர்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரம் கொரொனா நோய்த்தடுப்புக்காக மார்ச் 17ஆம் தேதி முதலே கல்லூரிகள் மூடப்பட்டு விட்டன .
மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்ட இருக்கவேண்டிய தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்தலாமா என மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன. தமிழகத்தில் ஆயிரத்து 600 கலை அறிவியல் கல்லூரிகளில் 32.35 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். 550 பொறியியல் கல்லூரிகளில் 10 லட்சம் மாணவர்கள் பயிலுகின்றனர்.
இவை தவிர இதர படிப்புகளில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களை சேர்த்து 50 லட்சம் பேர் தேர்வுக்காக வெளியில் வர வேண்டிய சூழல் உருவாகும். இதனால் நோய் பரவல் அதிகமாக வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனர் மாணவர்களும், ஆசிரியர்களும்.
ஜூலை 15-ஆம் தேதிக்கு பிறகு தேர்வை நடத்தலாம் என கடந்த வாரத்தில் உயர்கல்வித் துறைக்கு பரிந்துரை தெரிவித்தாலும் நோய்த்தொற்று ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களை அடைந்து வரும் நிலையில் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.
மேலும் ஆன்லைன் வழியில் தேர்வை நடத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியப்படாது என்கின்றனர் கல்வியாளர்கள்.






