திருச்சியில் கவரிங் நகைகளை வாடிக்கையாளர்களின் பெயரில் அடமானம் வைத்து 50 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர்கள்!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் வாடிக்கையாளர்கள் பெயரில் கவரிங் நகைகளை அடமானம் வைத்து 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் வங்கி கிளை மேலாளர் உட்பட வங்கி ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவெறும்பூரில் இயங்கி வரும் தனியார் வங்கியில் கடந்த மாதம் வாடிக்கையாளர் ஒருவர் அடமானம் வைத்த நகைக்கு வட்டி கட்ட வந்துள்ளார்.
அப்போது நகை மதிப்பீட்டாளர் ஆன சிவலிங்கம் அந்த வாடிக்கையாளர் பெயரில் மற்றொரு நகைக்கு வட்டி கட்டாமலே இருப்பதாக தெரிவித்துள்ளார். விசாரணையில் இதற்கு முன்பு நகை மதிப்பீட்டாளர் ஆக இருந்த பாலசுப்பிரமணியம் என்பவர் வாடிக்கையாளர் பெயரில் நகையை அடமானம் வைத்தது தெரியவந்தது. மேலும் அடமானமாக இருந்த நகைகளை சோதனை செய்தபோது அது கவரிங் நகைகள் என்றும் வெளிச்சத்திற்கு வந்தது.
இது தொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் திருவெறும்பூர் கிளையில் ஏற்கனவே மேலாளராக இருந்த பிரவீன்குமார் முன்னதாக நகை மதிப்பீட்டாளர் ஆக இருந்த பாலசுப்பிரமணியம் கூட்டு சேர்ந்து நகை அடமானம் வைக்க வரும் வாடிக்கையாளர்களிடம் லாவகமாக பேசி கவரிங் நகைகளை வாடிக்கையாளர்களின் பெயரிலேயே அடமானம் வைத்தது தெரியவந்தது.
அவர்களுக்கு யோகராஜ், வடிவேலு, ராஜேந்திரன், சிலம்பரசன் ஆகிய நான்கு வங்கி ஊழியர்கள் உடந்தையாக செயல்பட்டதும் அம்பலமானது. 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை வாடிக்கையாளர்களின் பெயரில் 250 பவுண் வரை அடமானம் வைத்து 50 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நகை மதிப்பீட்டாளர் ஆக பணிபுரிந்து வந்த பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.






