கொரோனா மனஅழுத்தத்தை போக்கும் கருவி ‘இசை’
கொரோனாவால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை போக்கும் கருவியாக இசை இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் அமைப்பு சார்பில் ஆன்லைனில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பேசிய அவர் பாடகர்கள், பாடலாசிரியர்கள், கலைஞர்கள், நாட்டில் மன உறுதியை உயர்த்துவதற்கு தங்களது கலைகளை பயன்படுத்தி வருவதாகக் கூறினார்.
கொரொனாவுக்கு எதிரான போரில் சுகாதாரப் பணியாளர்களை பாராட்டியும், கை தட்டியும் இசைக் கருவிகளின் ஒலி எழுப்பியும், இசை உண்டாக்கியதாகவும் இசை 130 கோடி மக்களையும் ஒன்றிணைத்து உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இசைக்கு ஒரே மாதிரியான ஒத்திசைவு தேவைப்படுவதை போல் தற்போதைய சூழலில் நாட்டு மக்களுக்கும் அது தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். இசையுடன் கூடிய கொண்டாட்டங்கள், விழாக்கள் மூலம் கடினமான சூழ்நிலையிலிருந்து மீள முடிவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.






