திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கைது செய்யப்பட்டதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கொரொனா தடுப்பு பணிகள் ,மேட்டூர் அணை திறப்பு, குடிமராமத்து பணிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக இல்லை என்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றும் அவர் கூறினார். மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
கொரொனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு படிப்படியாக நிதி வழங்கி வருவதாக கூறிய முதலமைச்சர் ஆனால் கேட்ட அளவுக்கு நிதி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். பட்டியலினத்தவரை இழிவு படுத்தி பேசுவதாக வந்த புகாரின் பேரிலே ஆர்எஸ் பாரதிகைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.