சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை அமைச்சர் பாஸ்கரன் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார். அருகில் ஆட்சியர் ஜெயகாந்தன், எம்எல்ஏ நாகராஜன்.சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 12 பேர் குணமடைந்தனர். மொத்தம் பாதிக்கப்பட்ட 29 பேரில், தற்போது 4 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று இருந்தது.அவர்கள் அனைவரும் குணமடைந்ததால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 700 -க்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டனர். அவர்கள் காரைக்குடி அமராவதிப் புதூர் , சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
சிலதினங்களுக்கு முன்பு நடந்த பரிசோதனையில் மகாராஷ்டிரா, மேற்குவங்க மாநிலங்களில் இருந்து வந்த 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சில தினங்களுக்கு முன்பு ஒருவர் குணமடைந்தார். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 12 பேர் குணமடைந்தனர்.
அவர்களை கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர்.இதில் நாகராஜன் எம்எல்ஏ, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனா, முகமதுரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொத்தம் பாதிக்கப்பட்ட 29 பேரில், 25 பேர் குணமடைந்ததால், தற்போது 4 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.