திமுக சட்டமன்ற உறுப்பினருமான மைதீன்கானின் மகன் ஒருவர் கொரொனா தொற்றால் உயிரிழந்தார். துணை ஆணையரின் அலுவலக காவலர்கள் உட்பட 13 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தியாகராயநகர் துணை ஆணையரின் ஓட்டுநர், அவரது அலுவலகத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர், மற்றும் பெண் காவலருக்கு கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
துணை ஆணையருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தோற்று இல்லை என தெரியவந்துள்ளது. கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வண்ணாரப்பேட்டை மற்றும் துறைமுக உதவி ஆணையர்கள் முத்தையால்பேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோர் குணம் அடைந்ததை தொடர்ந்து அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் முன்னாள் அமைச்சரும், பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினருமான மைதீன்கானின் மகன் சளித்தொல்லையால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.
அவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையிலிருந்து திரும்பிய 9 பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தனிமைப் படுத்தப் பட்டிருந்த நிலையில் அவர்களில் நான்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோன்று மும்பை சென்று வந்த கயத்தார், ஆத்திகுளம், ராமலிங்கபுரம் கிராமங்களை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.