தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.கோவையை பொறுத்த வரையில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஏற்கனவே 141பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதற்கிடையில்,நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி,குழந்தை உட்பட மூன்று பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து, கோவையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்தது.
எனினும், கரும்புக்கடையை சேர்ந்த பெண் ஒருவர் மட்டுமே தற்போது பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தார்.இவருக்கு, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தான் சிசேரியன் முறையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் குழந்தைக்கும் தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தொற்றால் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த கர்ப்பிணி பெண்ணும் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இதன் மூலம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை அறிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் பச்சை மண்டலமாக கோவை அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.கோவையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்கள் பூரண குணமடைந்து அனைவரும் நலமுடன் வீடு திரும்பியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கோவையை கொரோனா இல்லா மாவட்டமாக மாற்ற கடுமையாக உழைத்த அனைத்துத்துறையினருக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றியினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள ட்வீட்டில் கோவை மாவட்டத்தை #COVID19 இல்லாத மாவட்டமாக மாற்ற கடுமையாக உழைத்த மாவட்ட நிர்வாகத்தினர்,சுகாதாரத்துறையினர்,காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.