கொரொனா வைரஸ் இயற்கையானது அல்ல என்றும் ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் கூறி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். என்டிடிவி அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள அவர் கொரொனாவுடன் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சலுகைகளை அறிவித்து இருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்கரி நாடு ஒரு பொருளாதார போரையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றார்.
தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க தொடங்கினால் திரும்பி வரலாம் என்ற எண்ணத்தில்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர் என கூறினார். ஏழை நாடான இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக் கொண்டே போவது சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.