இவர் யார் தெரியுமா..? உமர் அப்துல்லா படத்தை பதிவிட்டு மம்தா பானர்ஜி ஆதங்கம்!!
கடந்த ஆறு மாதங்களாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, நீண்ட தாடியுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் நடப்பதை என்னால்ஸ ஜீரணிக்க முடியவில்லை. இதற்கெல்லாம் முடிவு எப்போது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 -வது சட்டப் பிரிவை கடந்தாண்டு ஆகஸ்டில் மத்திய அரசு திடீரென ரத்து செய்தது.இந்த முடிவை மேற்கொள்ளும் முன் அம்மாநிலத்தில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். தகவல் தொடர்பு வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து யாரும் காஷ்மீருக்குள் செல்ல முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அது மட்டுமின்றி, எதிர்க்கட்சித் தலைவர்கள் , பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டனர். முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். 6 மாதங்களுக்கு மேலாகியும் இவர்களின் வீட்டுக்காவல் முடிந்தபாடில்லை. இன்னும் வெளியுலக தொடர்பு இன்றி வீட்டுச் சிறையில் இவர்கள் வாடுகின்றனர்.
இந்நிலையில், வீட்டுச் சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, நீண்ட தாடியுடன் உருவத் தோற்றமே உருமாறிய நிலையில் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்றை, மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், உமர் அப்துல்லாவை இந்த தோற்றத்தில் பார்ப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ரொம்பவும் வருத்தமாகவும் உள்ளது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இப்படி நடப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதற்கெல்லாம் முடிவு எப்போது? என மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




