இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் மகேந்திர சிங் தோனி என்ற தல தோனி சர்வதேச கிரிக்கெட் உலகில் அடி எடுத்து வைத்த இன்றுடன் 15 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டன. தற்போதுள்ள இந்திய அணியில் தோனி இல்லை.
உலககோப்பை முடிந்தபோது சென்ற அவர் இன்னும் அணிக்கு திரும்பவில்லை. இதில் பல உள் அரசியல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தோனி அணியில் இல்லாவிட்டாலும் அவரது ரசிகர்கள் இன்னும் அவரை கொண்டாடத் தவறவில்லை. தோனிக்கு வயதாகிவிட்டது. அவரது தலைமையில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சீனியர் அணியாக இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தபோது சீனியர் என்றாலும் சிங்கம் சிங்கம் தான் என ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
அதற்கு ஏற்றார் போல தோனியும் ஐபிஎல் போட்டிகளில் புயல்போல விளையாடினார். ரசிகர்கள் இந்த அளவிற்கு கொண்டாட அப்படி என்னதான் செய்துவிட்டார் தோனி. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார் தோனி. முதல் போட்டியில் அவர் எடுத்த ரன்கள் அரை சதமும் அல்ல, வெறும் பூஜ்யம் தான்.
சச்சின் டெண்டுல்கர் கங்குலி, ராகுல் டிராவிட், சேவாக், யுவராஜ் சிங் அவர்களுக்கு மத்தியில் விளையாடிய தோனியை யாருமே கவனிக்கவில்லை. பங்முடி, கட்டுமஸ்தான உடல் என தனக்கென ஒரு ஸ்டைலில் வலம் வந்த தோனி தனது திறமையை நிரூபிக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்ளவில்லை. 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் தனது அபார பேட்டிங்கை உலகிற்கு வெளிப்படுத்தினார் தோனி.
4 சிக்ஸர், 15 பவுண்டரிகள் என 123 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார். அவரது அதிரடி பேட்டிங்கால் இந்திய அணி 356 ரன்கள் குவித்தது உடன் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் தோனி தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த நேரத்தில் இந்திய அணியில் இருந்த கீபிங் வெற்றிடத்தை சரியாக நிரப்பினார்.
இதனால் தோனி ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு வந்தது. 2007ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த உலக கோப்பையில் இந்திய அணி, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே தோற்று தொடக்கத்திலேயே வெளியேறியது. இதனால் கடுப்பான ரசிகர்கள் தோனியின் வீட்டில் கற்களை வீசி தாக்கினர்.
அதன்பிறகு தோன்றாமல் போய் விடுவார் என பலரும் விமர்சித்தனர். ஆனால் ஐசிசி சார்பில் முதல் முறையாக நடத்தப்பட்ட 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய தோனி யாரும் எதிர்பாராதவிதமாக கோப்பையை வென்று கொடுத்தார். அந்த தொடரில் அவர் எடுத்த சில அதிரடி முடிவுகள் ரசிகர்களை கொண்டாட வைத்தது.
அதுமட்டுமின்றி போட்டியின் நிலை எப்படி இருந்தாலும் முகத்தில் சிரிப்புடன் இருந்த தோனி ரசிகர்களின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்து விட்டார். அந்த கோப்பைக்கு பின்னர் தொடர்ந்து வெற்றி முகம் தான். ஆஸ்திரேலியாவிற்கு சென்று அங்கேயே அவர்களை தோற்கடித்தார். பலமுறை ஆஸ்திரேலியாவிடம் அடிவாங்கி துவண்டு போய்க் கிடந்த இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் இந்த வெற்றி பெறும் புத்துணர்ச்சியை கொடுத்தது.
இதற்கெல்லாம் மேலாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் கோப்பையை வென்று இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் ஆழ்த்தினார். அந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா தடுமாறிய நேரத்தில் களமிறங்கிய தோனி கடைசி வரை நின்று வெற்றியை பறித்து கொடுத்தார். இறுதியாக அவர் அடித்த வின்னிங் சாட் சிக்சர் இன்னமும் ரசிகர்களின் மனதில் பசுமை மாறாமல் நினைவிருக்கிறது. இதை தொடர்ந்து நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தோனி வென்றார்.