இந்துக்கள் மனம் புண்படும்படி கோவில் சிற்பங்கள் குறித்து சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல் திருமாவளவன் பேசியதாக அளித்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்து மக்கள் மனம் புண்படும்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாக கூறி இந்து அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பெரம்பலூரில் இந்து முன்னணி நகர செயலாளர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதம் மற்றும் இனம் குறித்து பேசி பகைமையை ஊக்குவித்தல், மதத்தை அவமதிக்கும் நோக்கத்தில் அசிங்கப்படுத்துவது, மத உணர்வை புண்படுத்தும் வார்த்தைகள் கூறுதல் மற்றும் அமைதியை குலைக்கும் நோக்கத்தில் அவமதிப்பாக பேசுதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் திருமாவளவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.