டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த வழக்கில் பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநில தலைமைச் செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் நிலவும் காற்று மாசு தொடர்பான வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய சுற்றுச்சூழல் துறை இணைச் செயலாளர் ஆஜராகி விளக்கம் அளித்தார். பயிர் கழிவுகளை எரிப்பதை தடுக்க ரோந்து காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். காற்று மாசுபாட்டினால் விலைமதிப்பற்ற வாழ்நாட்களை இழந்து வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இச்சூழல் எமர்ஜென்சி சூழலை விட மோசமாக உள்ளது என அவர்கள் கூறினர்.
மேலும் பயிர் கழிவுகள் எரிப்பதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் ஆறாம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு நீதிபதிகள் சம்மன் அனுப்ப ஆணையிட்டனர். இனியும் பயிர் கழிவுகள் எரிக்கப்பட்டால் கிராம தலைவர்கள் முதல் மாநில தலைமை செயலாளர் வரை அனைத்து அதிகாரிகளும் பொறுப்பு என்றும் அவர்கள் கூறினர்.
மேலும் மறு உத்தரவு வரும் வரை டெல்லியில் கட்டடங்கள் கட்டவும், கட்டுமானங்களை இடிக்கவும், திறந்தவெளியில் குப்பைகளை எரிக்கவும், ஜெனரேட்டர்களை இயக்கவும் கூடாது என நீதிபதிகள் ஆணையிட்டனர்.உத்தரவை மீறினால் ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.