சேலத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் சிறப்பு முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஏற்கனவே வாங்கப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
நீண்ட காலமாக தீர்க்கமுடியாத பிரச்சனைகளை தீர்க்கவே இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக கூறிய அவர் சரியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடவடிக்கை எடுக்கப்படாத மக்களுக்கு அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். நீர் மேலாண்மை திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறிய முதலமைச்சர் மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை எங்கெங்கு தடுப்பணைகள் கட்டலாம் என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றும், முதற்கட்டமாக கரூரில் தடுப்பணை கட்டப்படும் என்றும் கூறினார்.






