28 ஆண்டுகளுக்கு பிறகு பரோலில் வெளிவந்த நளினி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, கடந்த 28 ஆண்டுகளாகச் சிறையில் வாடி வந்த நிலையில், தனது மகள் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோலில் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்து சுதந்திரக்காற்றை சுவாசித்து வருகிறார்.
தனது மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய நளினிக்கு, சென்னை உயர்நீதி மன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் 1 மாதம் பரோல் வழங்கியது. அதையடுத்து, இன்று காலை அவர் வேலூர் மகளிர் சிறைச்சாலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியே வந்தார்.

காலை 10 மணியளவில் வேலூர் தொரப்பாடி பெண்கள் சிறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டு பின்னர் பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனம் மூலம் வேலூர் சத்துவாச்சாரி அருகே உள்ள ரங்காபுரம் சிங்கராயர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் தனது சகோதரி கல்யாணி, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோருடன் தங்குகிறார்.
நளினி தங்கியிருக்கும் வீட்டைச் சுற்றிலும் காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சுமார் 28 ஆண்டுகள் தொடர் சிறைவாசத்திற்கு பிறகு சுமார் 1 மாத காலம் அவருக்கு சுதந்திரம் கிடைத்துள்ள நிலையில், சுதந்திரக்காற்றை இனிமையாகவும், சந்தோஷமாகவும் தனது குடும்பத்தினருடன் கழிக்க நளினி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




