தமிழகம், புதுச்சேரியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடந்தே சென்று வாக்காளித்தார். ரஜினி, கமல், அஜீத், விஜய் உள்ளிட்டவர்களும் காலையிலேயே தங்களது ஜனநாயகக்கடமையை செய்தனர்.
தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகள், புதுச்சேரி தொகுதி உட்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அத்துடன், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து வருகிறது.
காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் வாக்களர்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். சேலம் மக்களவை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கை செலுத்தினார். தனது வீட்டில் இருந்து அவர் நடந்தே வந்து, வரிசையில் நின்று வாக்களித்து சென்றார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலியுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தனது வாக்கினை பதிவு செய்தனர்.
ஜனநாயக திருவிழா : வரிசையில் நின்று வாக்களித்தார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது குடும்பத்துடன் அடையாறில் வாக்களித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் நீண்ட நேரம் வரிசையில் நின்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மற்றும் ஸ்ருதி ஹாசன் தனது வாக்குகளை பதிவு செய்தனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்தார்.
விழுப்புரம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்தார் அன்புமணி ராமதாஸ். மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் ராஜ் வாக்களித்தார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாக்களிக்க உள்ள பெரியகுளம் வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.48% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.