கோவை உக்கடம் ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது.இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக பரவிய தகவலால், கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர்,அந்த லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் பிரகாஷை பொதுமக்கள் ஏன் இப்படி செல்கிறாய் என கேள்வி கேட்டுள்ளனர்.அப்போது,அவர் முண்ணுக்கு பின் முரணமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கண்டெய்னரில் ஏராளமான பணம் கட்டுக்கட்டாக கொண்டுசெல்வதாக அங்கிருந்தவர்கள் சந்தேகம் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையின் விரைந்து வந்து வேகமாக வந்த கண்டெய்னர் லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.பின்னர்,போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் பொதுமக்கள் கலைந்து செல்லாத காரணத்தால் லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை கலைத்தனர்.
வாகன நெரிசல் மிகுந்த உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போதும் இதே போன்றதொரு திருப்பூரில் பிடிபட்ட கண்டெய்னர் லாரியில் கட்டுகட்டாக கோடிக்கணக்கில் எஸ்.பி.ஐ வங்கி கிளைகளுக்கு கொண்டு சென்ற பணம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.கண்டெய்னர் லாரியை நேற்றிரவே காவல் துறையினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டனர்.பின்னர்,இன்று காலை மாவட்ட ஆட்சியர் ராசாமணி முன்னிலையில் அதனை திறந்து பார்த்த போது பெட்டி பெட்டியாக டீத்தூள் பண்டல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில் கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த டீத்தூள் மொத்த வியாபாரியிடம் இருந்து கேரள மாநிலத்திலுள்ள கொச்சி துறைமுகத்திற்கு ஏற்றுமதிக்காகவும் கொண்டு செல்வது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களிடம் பேசுகையில் இது போன்று வதந்தியை கிளப்புவோர் அரசியல் கட்சியினர் உட்பட யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த நிலையில் இன்று வதந்தியை பரப்பி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.