பொள்ளாச்சி பாலியல் வழக்கை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் கையாண்ட விதம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே பெண்ணை தாக்கியதாக இடமாற்றம் செய்யப்பட்ட பாண்டியராஜன், பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
இந்நிலையில் பாண்டியராஜன் உள்ளிட்டோரின் பெயர்களை குறிப்பிட்டு லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. ஜாங்கிட் எழுதியுள்ள கடிதத்தில், குரூப் 1 தேர்வு மூலம் காவல்துறை பணிக்கு வந்தவர்கள் முக்கியப் பொறுப்புகளை வகிப்பதாக கூறியுள்ளார்.
15 எஸ்.பி.க்கள் 8 துணை ஆணையர்கள் என 23 பேர் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குரிய பதவிகளை வகிப்பதாகவும், அதே நேரத்தில் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற பல துடிப்பான இளம் அதிகாரிகள் சரியான வாய்ப்பு பெறாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்
மாநில அரசின் தேவைகளுக்கேற்ப ஐ.பி.எஸ். அல்லாத அதிகாரிகளை நியமித்தாலும் 3 மாதங்களுக்கு மேல் பணியில் தொடர மத்திய உள்துறை அமைச்சக அனுமதி பெற வேண்டும் என்ற விதியையும் ஜாங்கிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனியாவது ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற அதிகாரிகளுக்கு முக்கியப் பணிகளை வழங்க அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் குரூப் 1 தேர்வுகளில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தவர்களை எஸ்.பி. அல்லது துணை ஆணையர் பதவிகளில் நியமிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காக எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் கடும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னரும் பாண்டியராஜன் அதே பதவியில் தொடர்வது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.