பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்த பெண்..! ஆத்திரமடைந்த உறவினர்கள் கல்வீசி தாக்குதல்..!
கன்னியாகுமரி கொட்டாரம் பகுதியை சேர்ந்த டாக்டர் குமாரசாமி மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் பவித்ராவிற்கு அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையை கருதி ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் பவித்ரா உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனை முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என புகார் எழுந்ததால் குமரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜான் பிரிட்டோ டாக்டர் குமாரசாமி மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்த டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விவரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
விசாரணை நடத்தி விட்டு வெளியே வந்த இணை இயக்குனரின் காரை வெளியே விடாமல் முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினர். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் மருத்துவமனையில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொது மக்களை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பினார். சாலைக்கு வந்த இளைஞர்கள் மருத்துவமனையின் வாசலில் அமர்ந்து மறியல் செய்ததோடு அங்கிருந்த விளம்பர போர்டை ஆத்திரத்தில் உடைத்தனர். அப்போது அங்கு வந்த டிஎஸ்பி பாஸ்கரன் பொதுமக்களை சமாதானப்படுத்தி கலந்து செய்தார்.







