அரசு அலுவலகத்தில் கழிவறை இல்லாத காரணத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
காஞ்சிபுரம் அருகே அரசு அலுவலகத்தில் கழிவறை இல்லாத காரணத்தால் இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள பொதுமக்கள் வீட்டிற்கு சென்ற மாற்றுத்திறனாளி பெண் ஊழியர் செப்டிக் டேங்கில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அமைந்துள்ள அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் சரண்யா என்ற மாற்றுத்திறனாளி பெண் மேலாளராக பணிபுரிந்து வந்தார். வேளாண்மை மையத்தில் கழிவறை வசதி இல்லாத காரணத்தால் அருகில் உள்ள பொதுமக்கள் வீட்டிற்கு கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி இருந்த நிலையில் கழிவறை வெளியே அமைக்கப்பட்டிருந்த செப்டிக்டேங் மீது போடப்பட்டிருந்த ஓட்டின் மீது சரண்யா கால் வைக்கும்போது ஓடு உடைந்து செப்டிக் டேங்கில் தவறி விழுந்துள்ளார். 8 அடி ஆழமுள்ள செப்டிக் டேங்கில் விழுந்து சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
அரசு அலுவலகத்தில் கழிவறை இல்லாத காரணத்தினால் வேறு வழியின்றி அருகிலுள்ள மற்றொரு வீட்டிற்கு அழைத்து சென்றதால் 24 வயதே ஆன மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






