தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை..!
தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால், பல இடங்களிலும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னையின் சில இடங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால், சாலைகள் குளமானது.
இதனிடையே சென்னை உட்பட புறநகர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என பெற்றோர் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் பள்ளி விடுமுறை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் குழப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார். இதனால் சென்னையில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு எந்த விடுமுறையும் அறிவிக்ப்படவில்லை.
இதே போன்று சென்னையின் புறநகர் மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த 4 மாவட்டங்களில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்றும் வீச கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





