தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்; பதிலுக்கு பாஜக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
நீட் விவகாரத்தை மையமாகக் கொண்டு நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.க்கள் வியாழக்கிழமை எதிரெதிரே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதற்கு போட்டியாக, மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக குற்றம்சாட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) எம்.பி.க்களும் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் இரு தரப்பினரின் போராட்டங்களால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது.






