தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுப்பு..!
வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 12ம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மலை பகுதிகளில் பலத்த மழை காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மண்சரிவு ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் கடையநல்லூர் பகுதியில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.






