ட்ரம்ப் சிக்கன் பிரியாணி.. 25 % தள்ளுபடி அறிவித்த விருதுநகர் ஓட்டல்!
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை என்ற காரணத்தால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளார். பின்னர் இதை 50% ஆக உயர்த்தியும், அதனை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
இந்த முடிவை எதிர்த்து, அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரபல தனியார் ஓட்டல் ஒன்று வித்தியாசமான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. அங்கு “டிரம்ப் சிக்கன் பிரியாணி” எனும் புதிய வகை உணவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் 25% வரிவிதிப்புக்கு பதிலடியாக, இந்த சிக்கன் பிரியாணிக்கு 25% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், டிரம்ப் தலையில் கை வைத்திருக்கும் படத்துடன், “அமெரிக்காவின் 25% வரி விதிப்பை எதிர்த்து, நமது ஓட்டலில் டிரம்ப் சிக்கன் பிரியாணி 25% தள்ளுபடியில் கிடைக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. சிவகாசி ஓட்டலின் இந்த சுவாரஸ்யமான அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





